கரூர்: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என அமைச்சர் செந்திலாபாலாஜி கூறியுள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2.66 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நவ.15-ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். கடந்த டிச.31-ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது. இதன் பின் ஜன.31-ம் தேதி முதல் பிப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
ஆனால், அப்போதும் 7 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்ததன் காரணமாக கால அவகாசம் பிப்.28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும். கடந்த முறை கால நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, மீதமுள்ள மின் பயனாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.