விரைவில் நிறைய மாற்றங்கள் வரும் எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்: புகழேந்தி சூசகம்

பெரியகுளம்: ‘எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சூசகமாக தெரிவித்து உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் நேற்று மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் புகழேந்தி கூறுகையில், ‘ஒரு தலைவரின் தாயார் மறைவிற்கு இரங்கல் கூட தெரிவிக்காதவர் எடப்பாடி.

அதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபிறகு, தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார். எடப்பாடியின் தற்போதைய நடவடிக்கை, ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தி அதிமுகவை இரண்டாக உடைக்கும் நோக்கில் இருப்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார். ‘ஓபிஎஸ்சை முழுமையாக பாஜ கைவிட்டு விட்டதால், அவர்களை நம்பி இனி எந்த பயனும் இல்லை’ என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, ‘‘அவர் மூத்த அரசியல் தலைவர்.  இதேபோல் ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்ஜிஆர் பின்னர் உணர்ந்து கொண்டார். பண்ருட்டியார் கூறியதுபோல் தமிழ்நாடு அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப் போகிறது’’ என்றார்.

Related Stories: