சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, அவருடைய சூட்கேசில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பசை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இரண்டு பயணிகளிடம் இருந்தும், ₹43 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, இரு பயணிகளையும் கைது செய்தனர்.