2 நிமிடம் 2 வினாடிகளில் 50 திருக்குறளை வேகமாக வாசித்த மணலி பள்ளி மாணவன்: சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

திருவொற்றியூர்: 2 நிமிடம் 2 வினாடிகளில் 50 திருக்குறளை வேகமாக வாசித்த மணலி பள்ளி மாணவன், சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மணலி, பெரியதோப்பு பலராமன் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுபாஷ், மணலி சின்னசேக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சுபாஷுக்கு திருக்குறள் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனால் 5ம் வகுப்பு முதலே திருக்குறளை நன்றாகப் படித்து, திருக்குறள் சம்பந்தமான பல்வேறு போட்டிகளில் சுபாஷ் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் திருக்குறள் வாசிப்பதில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் சுபாஷூக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களாக இதற்காக தொடர்ந்து பயிற்சி செய்த சுபாஷ், 2 நிமிடம் 2 வினாடிகளில் 50 திருக்குறளை வேகமாக வாசித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்தார். இதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் மாணவன் சுபாஷூக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவன் சுபாஷூக்கு ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: