ராணிப்பேட்டை அருகே பயங்கரம் பாட்டியை எரித்துக்கொன்று பேரன் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்

பாணாவரம்: பாட்டியை மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்துக்கொன்று, பேரனும் தீக்குளித்து  தற்கொலை செய்து கொண்டார். இதில் காப்பாற்ற முயன்ற தாயும் படுகாயமடைந்தார்.  ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மேலேரி  கிராமத்தை சேர்ந்தவர் பழனி (52), கூலித் தொழிலாளி. இவர் இரவு நேரத்தில் மாந்தோப்பில் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.  இவரது மனைவி யசோதம்மாள் (45), தாய் வள்ளியம்மாள்(75), மகன் அசோக்குமார் (25) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அசோக்குமார் சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்தாராம்.

நேற்று முன்தினம் இரவு தனது பாட்டி வள்ளியம்மாளிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் ஏதும் இல்லை என்று மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் கோபித்துக்கொண்ட அசோக்குமார் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அருகிலுள்ள உறவினர் ஒருவர் வீட்டில் இரவு படுக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சிறுநீர் கழிப்பதாக கூறிவிட்டு சென்ற அசோக்குமார் அவரது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெ்ய்யை  எடுத்து  தூங்கிக் கொண்டிருந்த பாட்டி வள்ளியம்மாள் மீது ஊற்றி வைக்கோலை போற்றிதீ வைத்துள்ளார். மேலும், தானும் மண்ணெண்ணெய்  ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த யசோதம்மாள், மகனை காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மூவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே அசோக்குமார் இறந்தார். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வள்ளியம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யசோதம்மாளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: