முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளனர்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை திறந்து வைப்பதற்கான அழைப்பிதலை நேரில் வழங்கினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  70-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் அறிய புகைப்பட கண்காட்சியை நடைபெற உள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின், சிறுவயது முதலான அறிய புகைப்படங்கள் இடம்பெறும். புகைப்பட கண்காட்சியை, திறந்து வைப்பதற்கு கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு பெருத்த மகிழ்ச்சியாக உள்ளது.” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கட்சி தொடங்கியது முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெறாமல் தனித்து களம் கண்டு வந்த கமல்ஹாசன் நாளை நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான இளங்கோவனை ஆதரித்தும்,நேரில் தொகுதிக்கே சென்றும் பிரச்சாரமும் செய்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பிரச்சார நடை பயணமான இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற பின்னர் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்த கமல்ஹாசன், அடுத்து முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: