சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் உள்ள பூதணி கண்மாயில் நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று, போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பருவமழை கை கொடுத்த நிலையில் கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. தற்போது நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில், கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து விட்டது. இதையடுத்து கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது.