உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியான அஜய் பங்காவை நியமிக்க, அமெரிக்க அதிபர் பரிந்துரை!!

வாஷிங்டன் : உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபிடன் பரிந்துரைத்துள்ளார். வாஷிங்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவராக இருந்த டேவிட் மல்பாஸ் சமீபத்தில் பதவியில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.இந்த நிலையில் உலக அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய - அமெரிக்கருமான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் அறிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேவை பூர்வீகமாக கொண்ட 63 வயதான அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றுகிறார். இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தி்ல உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். பிறகு நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றினார். இதையடுத்து பெப்சிகோ உணவு நிறுவனத்தில் பணியாற்றினார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்ட இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: