நியூயார்க் : உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகும் என ரஷ்யா அஞ்சியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் போர் தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது ரஷ்யா. இந்த உக்ரைன் - ரஷ்யா போரினால் சுமார் 42 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், 57 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 15 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.