இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கபசை பறிமுதல்: 2 பெண் பயணிகள் கைது

சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம்  மதிப்புள்ள 1.4 கிலோ தங்க பசையை, விமான நிலையத்தில் சுங்க  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையை சேர்ந்த 2 பெண் பயணிகளை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கை  தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா  பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த  பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது,  இலங்கையை சேர்ந்த 2 பெண் பயணிகள், சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு  வந்திருந்தனர்.

அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த பதில்கள் சுங்க  அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதையடுத்து பெண் சுங்க  அதிகாரிகள், 2 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்து சென்று, அவர்களை  முழுமையாக பரிசோதித்தனர். அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த  பிளாஸ்டிக் பவுச்சுக்குள் தங்கப்பசை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து, 1.4 கிலோ தங்க பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். மேலும், இரண்டு இலங்கை பெண் பயணிகளையும் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: