சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், கேட்க தயாராக உள்ளேன்.! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

புதுடெல்லி: சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், அவர் சொல்வதைக் கேட்க தயாராக உள்ளேன் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீனாவுக்கான தூதராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். இந்திய - சீன எல்லைப் பிரச்னைகளை பல ஆண்டுகளாக கையாண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அதற்காக நான் மிகவும் அறிவாளி என்று கூறவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய புரிதல் என்னிடம் உள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் அவரது (ராகுல் காந்தி) கருத்து சிறந்ததாக இருந்தால், அவர் சொல்வதைக் கேட்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் ஏற்கனவே சொன்னது போல, எனது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் எனது மனதில் உள்ளதை கூறுகிறேன். எதையும் மூடி மறைக்கவில்லை. சீனப் படைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு கூடுதல் படைகளை பிரதமர் மோடி அனுப்பிவைத்தார்; ராகுல் காந்தி அனுப்பவில்லை. 1962ம் ஆண்டில் நடந்த போருக்குப் பிறகும், குறிப்பிட்ட பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் வேண்டுமென்றே எல்லையை ஆக்கிரமித்துள்ளனர். அதற்கான காரணங்களை காட்டுகின்றனர். சீனர்கள் முதன்முதலில் 1958ம் ஆண்டில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் 1962ல் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றினர். சீன விவகாரத்தில் தற்போது அமைதி நிலவுகிறது’ என்றார்.

Related Stories: