சென்னை: சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். சென்னை கோட்டம் ரயில்வே திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த எம்பிக்களான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீரசாமி மற்றும் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல், ஆவடி, தாம்பரம் ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது. இதுதவிர, அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, திருத்தணி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.