ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு.!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. பண பட்டுவாடா நடைபெறுவதாக கூறி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்தனார் தலைமையில் தேமுதிகவினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்தனர்.

Related Stories: