135 பேர் பலியான மோர்பி பாலம் சம்பவம்: 49 கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்திருந்தது.! குஜராத் எஸ்ஐடி அறிக்கையில் பகீர்

மோர்பி: குஜராத் மோர்பி பாலத்தின் 49 இணைப்பு கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்ததாக அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி பாலம் கடந்தாண்டு அக்.30ம் தேதி அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்து வந்த அஜந்தா உற்பத்தி லிமிடெட் (ஓரேவா குழுமம்) நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால் தலைமையிலான குழு விசாரணை நடத்தி தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், ‘கேபிளில் உள்ள  கம்பிகளில் பாதி துருப்பிடித்து, பழைய கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் பாலம்  அறுந்து விழுந்தது. பாலத்தை பழுதுபார்த்தல், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளன. பாலத்தின் இரண்டு முக்கிய கேபிள்களில் ஒன்று துருப்பிடித்து இருந்தது. கேபிள் அறுந்து விழுவதற்கு முன் அதன் கம்பியின் கிட்டத்தட்ட பாதி உடைந்திருந்த நிலையில் இருந்தன. ஆற்றின் மேல்புறத்தில் உள்ள பிரதான கேபிள் அறுந்ததால் விபத்து ஏற்பட்டது. மொத்தமுள்ள 49 கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்தது. மீதமுள்ள 27 கம்பிகள் விபத்து ஏற்பட்ட போது ஆற்றில் அறுந்து விழுந்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: