நில உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி தராமல் தொடர்ந்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது: பாரத் ஸ்கேன் நிறுவன வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை:  ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் சஜிதா பேகம் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடத்தில் பாரத் ஸ்கேன் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. 22 ஆண்டுகளாக செயல்பட்ட இந்த நிறுவனம் 2016 முதல் இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை ெசலுத்தவில்லை. இதையடுத்து உரிமையாளர்கள் 2018ல் சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாடகையை தருமாறு பாரத் ஸ்கேன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இடத்தை காலி செய்ய இட உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பாரத் ஸ்கேன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசரித்த மேல் முறையீடு தீர்ப்பாயம் சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்கேன் நிறுவனம் ஐகோர்டில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடத்தின் உரிமையாளர்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.கே.மோகன் ஆஜராகி, பாரத் ஸ்கேன் நிறுவனம் சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வாடகை பாக்கியை செலுத்தாமல் தொடர்ந்து வழக்குகளை தொடர்ந்து வருகிறது என்று வாதிட்டார். பாரத் ஸ்கேன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருதரப்புக்கும் இடையே எந்த வாடகை ஒப்பந்தமும் இல்லை. ஆனால், கூடுதல் வாடகை கேட்கிறார்கள் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “நில உரிமையாளருக்கு வாடகை பாக்கியை தராமல் இருப்பது ஏற்க கூடியதல்ல. தற்போதைய சந்தை மதிப்பிலான வாடகையைவிட குறைவாக தருவோம் என்று மனுதாரர் தரப்பு கூறுவதில் எந்த சரியான காரணமும் இல்லை. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் குறையும் இருப்பதாக கருதவில்லை. அந்த உத்தரவுகள் உறுதி செய்யப்படுகின்றன. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: