பெர்லின்: ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை முடங்கியது. ஜெர்மனியில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிகப்பெரிய விமான நிலையங்களான பிராங்க்பர்ட், முனிச்,ஹாம்பர்க் உள்ளிட்ட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் விமான பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் அவதிக்கு உள்ளாகினர்.