திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாந்தோப்புகளில் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி, நொச்சியோடைப்பட்டி, தோட்டனூத்து, இரண்டலப்பாறை, நல்லாம்பட்டி, விராலிப்பட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாந்தோப்புகள் உள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தில் மாம்பழம் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மா மரங்கள் மகசூல் தரும். மா மரங்களில் மார்கழி மாதம் தொடங்கி மாசி மாதம் வரை மருந்து தெளிக்கும் பணி நடைபெறும்.
இந்த ஆண்டு தொடர்ந்து பெய்த கனமழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன் மரங்கள் பசுமையுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, இந்த ஆண்டு மா மகசூல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதனையடுத்து நொச்சி ஓடைப்பட்டி பகுதிகளில் உள்ள மாமரங்களில் மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த மருந்து தெளிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் மாமரங்களில் பூக்கள் பூத்திருந்த நிலையில் புழுக்கள் மற்றும் நோய் தாக்கத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மா மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு விவசாயிகள் மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அஞ்சுகுளிபட்டியைச் சேர்ந்த மா விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்தாண்டு பருவமழை காலங்களில் போதிய மழை பெய்துள்ளது. இதனால் இந்தாண்டு மாமரங்களில் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மா மரங்களில் பூக்கள் நன்கு பூப்பதற்கும், பூத்த பூக்களில் பிஞ்சுகள் பிடிப்பதற்கும் மருந்தடிக்கப்படுகிறது’’ என்றனர்.