மேலும் ஒரு வழக்கில் சுகேஷ் கைது: அமலாக்கத்துறை காவலில் எடுத்தது

புதுடெல்லி: தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுதருவதாக கூறி, சிறையில் இருந்தபடியே மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். ரெலிகேர் பிரமோட்டார் மால்விந்தர் சிங்கின் சகோதரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்தது மற்றும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுதருவதாக கூறி மோசடி செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ரெலிகேர் நிறுவனத்தை துவங்கிய தொழிலதிபர் மால்விந்தர் சிங், நிறுவனத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள மால்விந்தர் சிங்கிற்கு ஜாமீன் பெற்றுதருவதாக கோரி அவரது மனைவி ஜப்னாவிடம் சிறையில் இருந்துகொண்டே ஏமாற்றிய சுகேஷ் ரூ.4கோடியை மோசடி செய்துள்ளார்.

 இது தொடர்பாக டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு கடந்த 2021ம் ஆண்டு சுகேஷ் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே  சிறையில் இருக்கும் சுகேஷை அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் நேற்று  கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் சுகேஷை 14 நாள் காவலில் எடுப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால்  9 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Related Stories: