சென்னை: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த போட்டியில், அறிவியல் சார்ந்த புலனாய்வு, கணினி விழிப்புணர்வு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு, நாசவேலை தடுப்பு சோதனை, மோப்பநாய்களின் திறமை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகிறது. அதில், அறிவியல் சார்ந்த புலனாய்வு போட்டியின், காவல் உருவப்படம் பிரிவில் 23 மாநிலங்களில் இருந்து 60 காவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியை சேர்ந்த சென்னை மாநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் ஆனந்த் பெருமாள் கலந்து கொண்டார். அதில், 50 மதிப்பெண்கள் கொண்ட போட்டியில் 47.3 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்று, சென்னை மாநகர காவல்துறைக்கும் பெருமை சேர்ந்த காவலர் ஆனந்த் பெருமாளை நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.