விமானம் கொள்முதல், ஒத்துழைப்பு குறித்து ஜோ பிடன் - மோடி தொலைபேசியில் பேச்சு: பிரதமர் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: விமானம் கொள்முதல், இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க அதிபருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து பேசினர். மேலும் விண்வெளி, பாதுகாப்பு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

அப்ேபாது இருதரப்பு உறவுகள், வளர்ச்சி திட்டங்கள், ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக இந்திய-அமெரிக்க உறவுகள் அனைத்து களங்களிலும் ஆழமாகி வருவதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களுக்கு இடையே விமான கொள்முதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்து துறை விரிவடைந்து வரும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு போயிங் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த உரையாடலின்போது ஜோ பிடன், ‘பிரதமர் மோடியுடன் இணைந்து உலகளாவிய சவால்களை நாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதால், எங்கள் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதை நான் எதிர்நோக்குகிறேன்’ என்றார். மேலும் இந்தியாவின் தற்போதைய ஜி-20 தலைமையின்போது அதன் வெற்றியை உறுதிப்படுத்த இரு தலைவர்களும் தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: