ஆராய்ச்சி மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்துக்காக ரஷ்யாவின் குர்ஸ்க் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலை நிறுவனர் ஏ.சி.சண்முகம் பேட்டி

சென்னை: கல்வி மற்றும் மருத்துவத் துறையில் ஆற்றி வரும் சேவைகளை பாராட்டும் விதமாக டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி.சண்முகத்துக்கு, ரஷியாவின் குர்ஸ்க் மாநில பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தது. அதன்படி, ரஷிய பல்கலைக்கழகத்தின் 88வது ஆண்டு விழாவிலும், அங்கு நாசிக் படை வெளியேறிய 80வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியிலும் ஏ.சி.சண்முகம் கலந்து கொண்டார்.

இது குறித்து ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: குர்ஸ்க் பல்கலைக்கழக அழைப்பை ஏற்று, அங்கு சென்ற எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதலில் குர்ஸ்க் மாநிலத்தில் உள்ள 12 பல்கலைக்கழக வேந்தர்கள் பங்கேற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய நாட்டின் கல்வி மற்றும் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசினேன். பின்னர் மாநில சட்டமன்ற அவையில் உறுப்பினர்கள் முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தும் சிறப்பித்தனர். ஆராய்ச்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றத்துக்காக குர்ஸ்க் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. மேலும், குர்ஸ்க் பல்கலையின் உயரிய ‘பெல்லோஷிப்’ சான்றிதழும் வழங்கி கவுரவித்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிருபர்கள் கேட்ட போது, ‘‘ அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

Related Stories: