புழல் 32 வது வார்டில் சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டு புழல் அடுத்த சூரப்பட்டு பாரதிதாசன் நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சுடுகாடு சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இது படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது பாதியாக சுருங்கிவிட்டது. மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மாதவரம் மண்டல சார்பில், மக்கும் குப்பை, மக்காத குப்பை தர பிரிக்கும் இடமாக உள்ளது. மேலும் தெருக்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் குப்பை தொட்டிகள் இங்கு வீணாக போட்டு வைத்துள்ளனர்.

சுடுகாட்டுக்கு மின் விளக்குகள் இல்லாததால் சடலத்தை புதைக்கவும் ஈமச் சடங்கு செய்யவும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.இதுசம்பந்தமாக மக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மாதவரம் மண்டலம் மற்றும் 32 வது வார்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாடு இடத்தை மீட்கவேண்டும். சுற்றுச்சுவர் அமைத்து நிலத்தை பாதுகாக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்?

Related Stories: