தாய்லாந்து நாட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சி பெற்ற யானை பாகன், உதவியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார் அமைச்சர் மதிவேந்தன்

செங்கல்பட்டு: தாய்லாந்து நாட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சி பெற்ற யானை பாகன் மற்றும் உதவியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், பாராட்டி பரிசுகள் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் இன்று (13.02.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்லாந்து யானைகள் காப்பக மையத்தில் யானைகள் வளர்ப்பு மற்றும் காப்பக பராமரிப்பு பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி முடித்து திரும்பிய 13 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், அவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

பயிற்சி பெற்று திரும்பிய பணியாளர்களை பாராட்டி அமைச்சர் பேசும் போது தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு துறையிலும் புதுமையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வனத்துறையிலும் பல்வகையான புதுத் திட்டங்கள், புதிய பறவைகள் சரணாலயங்கள், வனவாழ் உயிரினங்களின் பாதுகாப்பு போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தி புதிய காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது யானை பாகன் மற்றும் அவரது உதவியாளர் காவடி உ ஆகியோருக்கு தாய்லாந்து நாட்டில் லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து யானைகள் காப்பகம் மையத்தில் 7 யானை பாகன்கள், 6 காவடிகள் ஆக மொத்தம் 13 பேர்கள் ரூ.50.00 இலட்சம் அரசு செலவில் 6 நாட்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் இப்பயிற்சியை வெற்றிகரகமாக முடித்து திரும்பியுள்ளனர். இவர்களுக்கு இப்பயிற்சியில் யானைகளை அறிவியல் ரீதியாக எவ்வாறு கையாள்வது, அதற்கு பயிற்சி அளிப்பது, அவைகளை எவ்வாறு குளிக்க வைப்பது, யானைகளுக்கான சத்தான உணவுகளை தயாரிப்பது, நோயுற்ற யானைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது, மதம் பிடித்த யானைகளை எவ்வாறு கட்டுபடுத்துவது, குட்டி யானைகளை பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தற்போது வனத்துறையில் மொத்தம் வளர்ப்பு யானைகள் (Captive Elephant) 54. மொத்த யானை பாகன்கள் 109 பேர்கள் உள்ளனர். தாய்லாந்தில் சிறப்பு பயிற்சி பெற்ற யானை பாகன்கள் மூலம் மற்ற பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை மற்றும் ஆனைமலை முகாம்களில் உள்ள யானைகளை சிறப்பாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், சீருடைகள் வழங்கினார். உயிரியல் பூங்கா ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பின்ர் வரலட்சுமி மதுசூதனன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / தலைமை வனஉயிரினக் காப்பாளர் திரு. சீனிவாஸ் ரா ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேசன், சென்னை வனஉயிரின காப்பாளர் / அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் ஈ. பிரசாந்த், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், உதவி இயக்குநர் மணிகண்டபிரபு, ஆணைமலை புலிகள் சரணாலய வனச்சரகர் சுந்தரவேல் ஆகியோர் கலந்து கொண்டு யானை பாகன்களுக்கான பயிற்சி குறித்தும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்கள்.

Related Stories: