மக்கள் தங்கள் கையில் செங்கல் எடுப்பதற்கு முன் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணியை துவங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை

சென்னை: மக்கள் செங்கல்லை எடுப்பதற்கு முன், ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணியை தொடங்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகு பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறும். இதேபோல், இந்த ஆண்டு, விளையாட்டு போட்டிகள் நேற்று காலை போரூரில் நடந்தது. இப்போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் ஒருவர் பந்து வீச, உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடினார்.

இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான முதல் போட்டியை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு விளையாட்டு அரங்குகளுக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்டவர்களின் குறைகளை கேட்டு, அதிகாரிகளுடன் கலந்து பேசி, அவற்றை முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம். இதை தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, நல்ல அறிவிப்புகள் விரைவில் வரும். கடந்த சட்டமன்றத் தேர்தலில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் குறித்து செங்கல்லை கையில் வைத்து சுற்றி வந்து பிரசாரம் செய்தேன். இதை தொடர்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துவங்க அம்மாவட்ட மக்கள் கையில் செங்கல்லை எடுப்பதற்கு முன், ஒன்றிய அரசு இப்பணியை விரைவில் துவங்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்துகிறேன்.

Related Stories: