கொரோனாவின்போது தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளித்ததில் முறைகேடு: விசாரணை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சென்னை, கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று பரவல் காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து, 2019-20, 2020-21ம் ஆண்டுகளில் கிருமிநாசினி தெளிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற விவரம் கேட்டு மூன்று முறை தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தேன்.

அதற்கு பதிலாக வந்த தகவலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டன.இதுசம்பந்தமாக சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: