குடியரசு தினவிழாவில் சிறப்பு அணிவகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கினார்

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட, படை பிரிவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேடயங்கள் வழங்கி சிறப்பித்தார். குடியரசு தின விழாவின்போது ஒவ்வொரு வருடமும், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள், தென்னக பண்பாட்டு மையம், செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகியவற்றின் கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு முதல், குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ளும் படை பிரிவினர்களில் சிறப்பாக செயல்படும் படை பிரிவினர்களுக்கு பரிசுகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார்.

அதன்படி, இந்தாண்டு விழாவில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ படை பிரிவின் சார்பில் தலைவர் கேப்டன் யாஷ் தாதல், மத்திய ரிசர்வ் காவல் படை பிரிவின் சார்பில் உதவி கமாண்டன்ட் மனோஜ் கேஆர் பான்டே, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை பிரிவின் சார்பில் ஆய்வாளர் வி.சுரேஷ்குமார், தேசிய மாணவர் படையின் (ஆண்கள்) சார்பில் தலைவர் என்.திலிப் மற்றும் சிற்பி பெண்கள் படை பிரிவின் சார்பில் தலைவர் எஸ்.மதினா, குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் மஞ்சு பாண்டே மற்றும் குரூப் கேப்டன் முகேஷ் பரத்வாஜ் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வின்போது, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், துணை செயலாளர் (மரபு) எஸ்.அனு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: