தமிழ்நாட்டில் 5 நாட்களுக்குள் பனியின் தாக்கம்‌ குறையும்: வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்குள் பனியின் தாக்கம்‌ குறையும் என வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து, பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி, பிப்ரவரி மாதங்களை குளிர்கால மாதங்கள் என்று சொல்வோம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி உள்ளது. ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது. பகல் நேரங்களில் நீர்நிலைகளில் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாக கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.

இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும்போது வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்போது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் மூடு பனி உருவாகிறது. அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்னும் 5 நாட்களுக்குள் தமிழகத்தில் மூடு பனி குறையும். நிலநடுக்கத்தை பதிவேடு செய்யும் கருவிகள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். நிலநடுக்கம் வருவதற்கு முன்பாக தெளிவாக கணிக்க முடியாது. எந்தெந்த பகுதிகளில், மண்டலங்களில் பாதிப்புகள் இருக்கும் என்பது அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: