கடலூர்: குடும்பத் தகராறில் மனைவி, மகன், மாமியார், மனைவியின் சகோதரி மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 3 பேரும் உயிரிழந்தார். பெட்ரோல் ஊற்றிய வாலிபரும் தீயில் கருகி பலியானார். கடலூர் முதுநகர் வெள்ளிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (31)-தமிழரசி (29) தம்பதி. இவர்களது 6 மாத கைக்குழந்தை ஹாசினி. தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24), தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சற்குரு(26)வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு லக்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றிய சற்குரு, தற்போது வேலையின்றி இருந்தார். இந்நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தம்பதிக்குள் மோதல் வந்துள்ளது. இதையடுத்து, தனலட்சுமி தனியாக வசித்துள்ளார். இதனால், சற்குரு அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனலட்சுமி விவாகரத்து கொடுக்காமல் சேர்ந்து வாழும்படி கூறி உள்ளார். இதையடுத்து அவர், தாய் செல்வி (45), குழந்தை லக்சனுடன் அக்கா வீட்டுக்கு சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சற்குரு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டின் கதவை சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டு, மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றியுள்ளார். அவர் தீவைப்பதற்குள் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீப்பொறி பறந்து தனலட்சுமி, செல்வி, தமிழரசி, லக்சன், ஹாசினி, சற்குரு ஆகிய 6 பேர் மீதும் தீப்பற்றியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தமிழரசி, கைக்குழந்தைகளான ஹாசினி, லக்சன் ஆகியோர் கருகி பலியாகினர். கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து, உயிருக்கு போராடிய செல்வி, சற்குரு, தனலட்சுமி ஆகியோரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குருவும் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனலட்சுமி, செல்வி ஆகியோர் 90 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. முதலில் தனக்கு தானே ஊற்றினார்:மனைவி வாக்குமூலம்மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் தனலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், ‘கணவர் வீட்டுக்கு வரும்போது, பெட்ரோல் கேனை எடுத்து வரவில்லை, எங்களிடம் பேசிவிட்டு வெளியில் சென்று பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து வந்து முதலில் அவர் மீது ஊற்றிக் கொண்டார். அதை பார்த்து நான் தள்ளிவிட்டபோது, அருகில் விறகு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ அனைவர் மீதும் பட்டு தீப்பிடித்துக் கொண்டது’ என்றார். தனலட்சுமி தாயார் செல்வி வாக்குமூலத்தில், நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்று கொண்டிருந்தோம், எங்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சற்குரு அவர் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். இதனால் நான் அவரை கையால் அடித்தேன். இதில் அவர் மீது இருந்த பெட்ரோல் எங்கள் மீது தெறித்தது. அப்போது விறகு அடுப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீ எங்கள் அனைவர் மீதும் பற்றிக்கொண்டது என்றார்.