ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எடப்பாடி அணி அளித்த பட்டியலை மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக அதிமுக சார்பில் முதலில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு அணியினரும் தங்கள் தரப்பில் பிரசாரம் செய்யும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் அணி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்தநிலையில்தான் தேர்தல் ஆணையம் நட்சத்திர வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி எடப்பாடி அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் என 40 பேர் கொண்ட பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வமோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால், அந்த செலவு முழுவதும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் உள்ளிட்ட யாரும் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.

Related Stories: