சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரண தொகை போதுமானதல்ல. விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நடவு நட்டு, உரம் போட்டு, பாதுகாத்து பயிர் செய்தார்கள். இந்நிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் மழையினால் சேதமுற்றது. எனவே, செலவு, உழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டால் நெற்பயிர்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால் தான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரளவுக்கு நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள். எனவே, நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல்மூட்டைகளை பாதுகாக்கவும், நனைந்து வீணாகியுள்ள நெல்மூட்டைகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.