கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி வழக்கு இபிஎஸ், ஓ.பி.எஸ் பதில்தர நோட்டீஸ்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி.  கே.சி.பழனிசாமி, கடந்த 2018ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,  குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு. அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  ஆகியோருக்கு, தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை.  

தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: