உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்

புதுடெல்லி: உச்சநீதி மன்றத்துக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. அவர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர். உச்சநீதி மன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜீயம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், உச்சநீதி மன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, “இது முக்கியமான விவகாரம். இதில் சங்கடமான நிலையை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடாதீர்கள்” என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி, கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உச்சநீதி மன்றத்துக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டிவிட்டரில், “ராஜஸ்தான் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல்,

மணிப்பூர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதி மன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலாகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் 5 பேருக்கும் நாளை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி சந்தி சூட் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.  இதனால் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக அதிகரிக்கும்.  மொத்த நீதிபதிகள்எண்ணிக்கை 34 ஆகும்.

Related Stories: