போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தாத 5,336 வாகன ஓட்டிகளிடம் ரூ.61 லட்சம் அபராதம் வசூல்: 21,175 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன், போக்குவரத்து விதி மீறல் அபராதம் செலுத்தாத 5,336 வாகன ஓட்டிகளிடம் ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வதன் மூலமும் சாலை விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை போக்குவரத்து காவல்துறை திறம்பட செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலான விதிமீறல் செய்பவர்கள் அபராத தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எனவே 11.4.2022 அன்று சென்னையில் 10 அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விதிமீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 27.1.2023 அன்று 166 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 5,757 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.17,42,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த தொடர் நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பு வாகன சோதனையின்  மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க கடந்த 2ம் தேதி  மற்றும் 3ம் தேதி  நகரின் 166 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 3 இடங்களை தேர்வு செய்து, விதி மீறுபவர்களை பணமில்லா பரிவர்தனை மூலம் (கிரெடிட்/டெபிட் கார்டு, க்யூஆர் குறியீடு அல்லது ஆன்லைன் பேமண்ட்) அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 5,336 வாகன ஓட்டிகளின் 21,175 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த துரித நடவடிக்கையில் எந்தவிதமான துன்புறுத்தல் இல்லாமல் வண்ணாரப்பேட்டை, எழும்பூர், வேளச்சேரி காவல் நிலையங்கள் சிறப்பாக பணி செய்து பொதுமக்கள் பாரட்டும் வகையில் நடந்து கொண்டனர். எதிர்காலத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகள்  தொடரும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Stories: