வாணி ஜெயராம் மறைவு இசையுலகை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வாணி ஜெயராம் மறைவு இசையுலகை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

அண்மையில் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான திருமதி வாணிஜெயராம் அவர்களின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: