ஓய்வுபெற்ற போலீசார் உயிர் நீத்தால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரி சீருடையுடன் மரியாதை செலுத்த வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: ஓய்வு பெற்ற போலீசார் உயிர் நீத்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி சீருடையுடன் இறுதி மாரியாதை செய்ய வேண்டும் என்று அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்துகொண்டு காவல்துறை தலைமை இயக்குநர், காவல் படை தலைவர் சார்பாக மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்ய வேண்டும்.

மேலும், இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு, ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வுபெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: