கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்

பெங்களூரு: காங்கிரஸ் தலைமையிடம் உள்ள உறவை கெடுக்கும் வகையில் போலி கடிதம் எழுதும் நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது பெயரில் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி, தனக்கும் தலைமைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தின் நகலை வெளியிட்டு மேலும் அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமைக்கு நான் எந்தவொரு கடிதத்தையும் எழுதவில்லை. எனக்கும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், தேசிய தலைமைக்கும் இடையே உள்ள உறவை கெடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறாக அடிக்கடி போலி கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்க  உள்ளேன். அப்போது தான் போலி கடிதம் எழுதிய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்’ என்றார். சித்தராமையா வெளியிட்ட கடிதத்தில், சோனியா காந்திக்கு அவர் எழுதியதாகவும் அதில், ‘வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது; இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே சித்தராமையாவின் கடித விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: