சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. மேலும், வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நெற்பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை. அதேபோல, விளைந்த நெல்பயிர்கள் உதிர்ந்து கொட்டி விடும் என்பதால், உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், உழவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.
