கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரள பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இன்று தாக்கல் செய்தார். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரு2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை கேரளாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.2022-23ம் நிதியாண்டுக்கான கேரள பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியது: கேரளா தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. கொரோனா ஓக்கி புயல் உள்பட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சவால்களை கேரளா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.கேரளா வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்தார். பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரு2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறைக்கு ரு321.31 கோடியும், ரப்பர் விவசாயிகளுக்கு உதவுவதற்காக 600 கோடி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.உள்நாட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக மேக் இன் கேரளா திட்டத்திற்கு ரு100 கோடியும், கடலோர அபிவிருத்திப் பணிகளுக்கு ரு115 கோடியும், சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரு30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புக்கு ரு50 கோடியும், வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகளுக்கு உதவுவதற்காக விமான டிக்கெட் கட்டணத்தை கட்டுப்படுத்த ரு15 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விழிஞ்ஞத்தை துபாய் போல வர்த்தக துறைமுக நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மேலும் பல சேவைகள் ஆன்லைன் ஆக்கப்படும் என்றார்.

Related Stories: