அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

வேலூர்: மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக 1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு மூலம் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, விஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

அதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  அதன் தொடர்ச்சியாக இன்று (2.2.2023) காலை சத்துவாச்சாரியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையக் கட்டடத்திற்கான  கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றியதாவது; கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் முதலாவது கூட்டம் இந்தக் கூட்டம். கள ஆய்வை வேலூரில் இருந்து தொடங்கியதை நான் மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நான் உட்பட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், துறையின் முதன்மைச் செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளும் நேற்றையதினம் இந்த நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கள் துறை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல பணிகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, இதனுடைய நோக்கம் அது அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

விரைவிலே நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கிறது. நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும்; தொய்வுகளை நீக்க வேண்டும். நம்முடைய பணிகளில் காணக்கூடிய இடர்களையெல்லாம் குறைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் - உங்கள் பிரச்சனையை நேரடியாக அறிவதற்கும் தான் இந்த ஆய்வுக் கூட்டம். உங்களுடைய கருத்துக்களையெல்லாம் அரசினுடைய கவனத்தில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரக்கூடிய அரசுத் துறை அலுவலர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 20 மாத காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்து, எத்தனையோ திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இதெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்பால்தான், உங்களுடைய செயல்திறத்தால் தான் அதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். அதற்காக முதலில் என்னுடைய நன்றியை  உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும், இன்னும் வேகமாக வழங்க வேண்டும்.

இந்த ஆய்வின் போது,

* குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,

* வருவாய்த் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள்,

* ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன்,

* நகர்ப்புற வளர்ச்சி,

* சாலை மேம்பாடு,

* வாழ்வாதாரத்தை உயர்த்துதல்,

* இளைஞர் திறன் மேம்பாடு,

* பொதுக் கட்டமைப்பு வசதிகள்,

* கல்வி,

* மருத்துவம்,

* குழந்தைகள் ஊட்டச்சத்து

போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனுடைய  பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இந்தத் துறைகள் சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் எந்தளவிற்கு செயலாக்கம் பெற்றுள்ளன, செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் ஆய்வு செய்திருக்கிறோம். இந்த களப்பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு துறை தலைவர்களும் அரசு செயலர்களும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் இதைத்தான் நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் காரணமாக மக்கள் பெறக்கூடிய பயன்கள் குறித்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள்.

திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்ன என்று கண்ணுக்கு முன்னால் கவனிப்பவர்கள் நீங்கள். அந்த அடிப்படையில் இந்தக் கூட்டம் மிகமிக முக்கியமான கூட்டமாக அமைந்திருக்கிறது. அதே போல் எல்லோரையும் ஒருசேரச் சந்திப்பதும் மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும் - யாரும் தனியாகச் செயல்பட முடியாது. அப்படி செயல்பட முற்பட்டால் அது தாமதத்திற்கு தான் வழிவகுக்கும். அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்  அடிப்படையான வழிமுறை. உங்கள் பணிகளையெல்லாம் இணைக்கும் ஒரே விபரம் மக்கள் நலன். அதனை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும்.

மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றக்கூடிய அலுவலர்களை பாராட்டுங்கள், அது மற்றவர்களை ஊக்கப்படுத்தும். பின்தங்கும் அலுவலர்களுக்கு வழிகாட்டி, அவர்களது பணியும் மேம்படுவதை மாவட்ட ஆட்சியாளர்களே நீங்களும் துறைத்தலைவர்களிடம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடுதான் நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடுதான் திட்டங்களை தீட்டி வருகிறோம். தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் இதையெல்லாம் முதல்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டினோம்.

அடுத்த கட்டமாக அமைச்சர்கள் - செயலாளர்கள், அவர்களோடு கலந்துரையாடல்கள் மூலமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மூலமாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகமாகிய உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் அலுவலர்களாகிய உங்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது. அடுத்ததாக, ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது.  பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் - சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும். திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

டெண்டர் விட்டோம் - திட்டத்தை முடித்துத் தர வேண்டியது ஒப்பந்ததாரரின் வேலை என்று இருந்து விடாமல் அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கடமை உங்களுடைய கடமை. சார்நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள்.

மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும். அரசினுடைய முன்னுரிமை பணிகள் (Priority items) எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.  மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அடுத்த, அடுத்த மாதத்தில்  தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது.  அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

பல ஆண்டு அனுபவமும் பல்துறை ஆற்றலும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினுடைய நோக்கம். அதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். அந்த வகையில் உங்கள் அனைவருடைய பணியும் சிறந்து மேம்பட, தமிழ்நாடு எல்லா வகையிலும் உன்னத நிலையை அடைந்திட மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர். ஆனந்தகுமார், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்,  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: