சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி முதற்கட்டமாக ரூ.2,900 கோடி கடன் உதவி செய்துள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 188.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் என சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இத்திட்ட விரிவாக்க பணிக்கு ரூ.2,900 கோடி கடன் உதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரஜித் குமார் மிஸ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி நிலயா மிட்டாஷா அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடன் தொகையை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடம் மற்றும் மாதவரம், சிறுசேரி, சிப்காட் வரையிலான 5-வது வழித்தடத்தில் செலவிட உள்ளதாக சென்னை மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.