திருவொற்றியூர்: திருவொற்றியூர், விம்கோ நகரில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலை வைத்துள்ளனர். இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனியார் பேருந்து பின் நோக்கி வரும்போது, விம்கோ நகர் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக இந்திரா காந்தி சிலை மீது மோதியது. இதில் சிலை சேதமடைந்தது. இதனால், பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த சிலையை ஆய்வு செய்து, பின்னர் துணியால் சிலையை மூடினர். மேலும், போலீசார், பேருந்து ஓட்டுனர் ஜானை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.