சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு சோதனையில் 2.38 கிலோ குட்கா, 500 கிராம் கஞ்சா பறிமுதல்; 17 பேர் அதிரடி கைது

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு சோதனையில் 2.38 கிலோ குட்கா, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று (31.01.2023) போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘  தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (31.01.2023) நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 500 கிராம்  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 380 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 470 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆக மொத்தம் நேற்று (31.01.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையில் கஞ்சா மற்றும் குட்பா விற்பனை தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 500 கிராம் கஞ்சா, 2.38 கிலோ குட்கா மற்றும் 47 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று (31.01.2023) ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 327 குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 05 குற்றவாளிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 07 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (31.01.2023) ஒரே நாளில் மட்டும் 10 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (31.01.2023) காவல் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்கள் சென்னை பெருநகரிலுள்ள   49 பள்ளிகள், 6 கல்லூரிகள் மற்றும் 72 பொது இடங்கள் என மொத்தம் 127 இடங்களில் போதைப் பொருள் எதிர்ப்பும், அதன் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் 3,308 பள்ளி மாணவ, மாணவிகள், 350 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 1,542 பொதுமக்கள் என மொத்தம் 5,200 நபர்கள் கலந்து கொண்டு, காவல்துறையின் போதை ஒழிப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தும், தங்களது சந்தேகங்களை கேட்டும் தெளிவடைந்தனர்.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: