தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 2,546 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி ஒரு வழிச்சாலையில் வாகனம் ஓட்டியதாக மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,546 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், மாநகர காவல் எல்லையில் கூடுதல் போக்குவரத்து கமிஷனர் கபில் குமார் சரத்கர் உத்தரவுப்படி, மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதை மற்றும் எதிர்திசையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வழிப்பாதை மற்றும் தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 2,546 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், சம்பவ இடத்திலேயே 763 வாகன ஓட்டிகள் ரூ.3,81,500 அபராதமாக செலத்தினர்.

Related Stories: