டென்னிஸ் தரவரிசை மீண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார் ஸ்வியாடெக்

துபாய்: டபுள்யு.டி.ஏ மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், ஏடிபி ஆண்கள் பிரிவில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார். ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு பிறகு  உலக தரவரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஸி ஓபனில் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்   பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். கொரோனா தடுப்பூசி சர்ச்சை காரணமாக, ஆஸி. ஓபனில் கடந்த ஆண்டு விளையாட முடியாததால் 2022 ஜூனில் அவர் முதல் இடத்தை இழந்தார்.

அதன் பிறகு  ரஷ்ய வீரர்  மெத்வதேவ், யுஎஸ் ஓபன் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) முதல் இடத்தில்  இருந்தனர். அல்கரஸ் காயம் காரணமாக ஓய்வெடுத்து வருவதால் 90 புள்ளிகளை இழந்து 2வது இடத்துக்கு (6730) தள்ளப்பட்டுள்ளார்.   ஆஸி. ஓபன் வெற்றியால் முழுமையாக 2000 புள்ளிகளை பெற்ற ஜோகோவிச்  7070 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்பெயின் நட்சத்திரம் நடால்  1955 புள்ளிகளை இழந்து  3,815 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4 வது  இடத்துக்கு பின்தங்கி உள்ளார். ஒரு இடம் முன்னேறிய சிட்சிபாஸ் (  கிரீஸ்) 3வது இடத்திலும்,  ஒரு இடம் பின்தங்கிய கேஸ்பர் ரூட் (நார்வே) 4வது இடத்திலும் உள்ளனர்.

மெத்வதேவ் 12 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில்  ஸ்வியாடெக் (10485) முதல் இடத்தில் தொடர்கிறார். அவர் ஆஸி. ஓபனில் 4வது சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பட்டம் வென்ற சபலென்கா (பெலாரஸ்) 6100 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.  ஆன்ஸ் ஜெபர் (துனிசியா),  ஜெசிகா (அமெரிக்கா),  கார்சியா(பிரான்ஸ்), சாக்கரி (கிரீஸ்) ஆகியோர் ஒரு இடம் பின்தங்கி  முறையே 3, 4, 5, 7வது இடங்களில் உள்ளனர்.

Related Stories: