புதுச்சேரி: புதுவையில் நடந்த ஜி 20 மாநாட்டில் 17 நாட்டை சேர்ந்த 75 விஞ்ஞானிகள் பங்கேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூக கலாசாரத்தோடு இணைத்தல் உள்பட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர். இன்று ஆரோவில் சென்று சுற்றிபார்க்கின்றனர். புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷனில் ஜி20 மாநாட்டின் ஒரு அங்கமான அறிவியல்-20 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 17 நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு அறிவியல் நிலையங்களின் தலைவர்கள் என 75 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் உலகளாவிய முழுமையான சுகாதாரம், சுத்தமான பசுமையான ஆற்றலை ஏற்றுக்கொள்வது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை சமூக கலாசாரத்தோடு இணைத்தல் ஆகியவை மாநாட்டின் நோக்கங்களாக கொண்டு விவாதிக்கப்பட்டது. மாநாடு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.