புதுவையில் ஜி20 மாநாட்டில் 17 நாட்டு விஞ்ஞானிகள் கலந்துரையாடல்: இன்று ஆரோவில் செல்கின்றனர்

புதுச்சேரி: புதுவையில் நடந்த ஜி 20 மாநாட்டில் 17 நாட்டை சேர்ந்த 75 விஞ்ஞானிகள் பங்கேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூக கலாசாரத்தோடு  இணைத்தல் உள்பட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர். இன்று ஆரோவில் சென்று சுற்றிபார்க்கின்றனர். புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷனில் ஜி20 மாநாட்டின் ஒரு அங்கமான அறிவியல்-20 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா,  இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 17 நாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு அறிவியல் நிலையங்களின் தலைவர்கள் என 75 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் உலகளாவிய முழுமையான சுகாதாரம், சுத்தமான பசுமையான ஆற்றலை  ஏற்றுக்கொள்வது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை சமூக கலாசாரத்தோடு இணைத்தல் ஆகியவை மாநாட்டின் நோக்கங்களாக கொண்டு விவாதிக்கப்பட்டது. மாநாடு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இது குறித்து மாநாட்டின் சேர்மன் அஷுதோஷ் சார்மா கூறுகையில், நாடுகளுக்கிடையே தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பாகவும், அறிவியலால் ஏற்பட்டுள்ள புதிய கொள்கைகள், பரிமாணங்கள் எதிர்கால திட்டமிடல்கள் குறித்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது. நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு அறிவியலை எப்படி பயன்படுத்திக்கொள்வது, உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு, பசுமை ஆற்றலை உலகநாடுகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை அனைத்து பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஜூலை மாதம் வரை இதுபோன்ற மாநாடுகள் நடைபெறும். இங்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, பின்னர் செயல் வடிவம் கொடுக்கப்படும் என்றார். பிரதிநிதிகள் அனைவரும் இன்று காலை சர்வதேச நகரமான ஆரோவில் சென்று பார்வையிடவுள்ளனர்.

Related Stories: