ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் காந்தி கண்டனம் இலவச வேட்டி, சேலை திட்டம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கை வெளியீடு

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து உண்மைக்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி - சேலை வழங்காத அரசுக்கு கண்டனம், பொங்கலே முடிந்து 10 நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி சேலைகள் இன்னும் வழங்கப்படவில்லை  என கடந்த 27ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் உண்மைக்கு மாறான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக ரூ.487.92 கோடி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இதில் 177.64 லட்சம் சேலைகள் மற்றும் 177.23 லட்சம் வேட்டிகள் உற்பத்தி செய்ய வருவாய் துறையின் தேவைப்பட்டியல் பெறப்பட்டது.  இதில், வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ள தேவைப்பட்டியலின் படி அனைத்து தாலுகாக்களுக்கும் மேற்படி வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணிகளை கடந்தாண்டு டிச.15ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடந்த 27ம் தேதியில் 137.66 லட்சம் சேலைகள் மற்றும் 112.81 லட்சம் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  இதில் 122.78 லட்சம் சேலைகள் மற்றும் 97.02 லட்சம் வேட்டிகள் பயனாளிகளுக்கு வழங்க அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு முன்னரே கடந்த 9ம் தேதி  தமிழ்நாடு முதல்வரால் சென்னை, மயிலாப்பூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சத்யா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் விநியோகிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

எனவே, வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கும் பணி துவக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் தான் நிறைவு செய்யப்படுகிறது. அதேபோல தான், நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள்  துவக்கப்பட்டு, இத்திட்டம் வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நிறைவுறும் என்பதே உண்மை.

Related Stories: