மும்பை: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரை தான் சந்தித்தாக நடிகை சாஹத் கன்னா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளள சுகேஷ் சந்திரசேகரை, பாலிவுட் நடிகைகள் பலர் சந்தித்து ஆதாயம் அடைந்ததாக புகார்கள் உள்ளன.
அந்த பட்டியலில் தற்போது நடிகை சாஹத் கன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை சந்திப்பதற்காக அவரது உதவியாளர் பிங்கி இரானி என்னை சிறைக்கு அழைத்து சென்றார். அங்கு நான் சுகேஷ் சந்திரசேகரை சந்தித்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக மண்டியிட்டு கூறினார். நான் அவரிடம், ‘எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்’ என்று கூறினேன். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும் அவர் என் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பதாகவும் உறுதியளித்தார். இவரது பேச்சை கேட்டு, நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு கட்டத்தில் நான் அழ ஆரம்பித்துவிட்டேன்’ என்று கூறினார்.