அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பொது விநியோக திட்டத்தின்படி  குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து திட்டம் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து  செறிவூட்டப்பட்ட அரிசி, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில்  கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள நுண்ணோட்டச்சத்தின்  பயன்களாக இரும்புச் சத்து ரத்த சோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும் ரத்த  உற்பத்திற்கும் உதவுகிறது. அதேபோல, வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 2020 செப்.21ம் தேதி  திருச்சியில் அறிமுக திட்டமாக பொதுவிநியோக திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு கடந்த 2020 அக்.1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினை ஒன்றிய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதில் முதல் நிலையாக, ஒன்றிய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி  வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு கடந்தாண்டு ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, இரண்டாவது நிலையாக,  ஒன்றிய  அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக ஒன்றிய அரசு தேர்வு செய்தது. இந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி  வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாவது நிலையாக, அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் ஒன்றிய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோக திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால்  நுண்ணோட்ட சத்து குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் நுண்ணோட்ட சத்து குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும்.

Related Stories: