போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பில் செலுத்திய வாலிபர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வீரமலை கிராமத்தில் ஒரு கடையின் முன்பு, நேற்று முன்தினம் மாலை, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள், கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் மற்றும் அங்கிருந்தவர்கள், அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் எழுந்திருக்காததால், 3 பேரையும் அவர்கள் வந்த காரிலேயே ஏற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்த போது, 3 பேரும் போதை மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது.