ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி

தன்பாத்: ஜார்கண்டில் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் மருத்துவரான தம்பதியர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்டில் உள்ள தன்பாத் பகுதியில் ஒரே கட்டிடத்தில் வீடு மற்றும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் உள்ள அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ பற்றியுள்ளது. மளமளவென பரவிய  தீ மருத்துவமனை முழுவதும் பரவியது. தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் அதில் இருந்தவர்கள் யாராலும் வெளியே வரமுடியவில்லை. இதனிடையே மருத்துவமனை தீப்பற்றி எரிவது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின்பேரில் 6 தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் விகாஷ் ஹஸ்ரா,  அவரது மனைவியும் மருத்துவருமான பிரேமா ஆகியோர் புகையினால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களது உறவினர் சோகன் கமாரி மற்றும் உதவியாளர் தாராதேவி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் மருத்துவர் ஹஸ்ராவின் செல்லபிராணியான நாயும் இதில் உயிரிழந்தது.

தீயில் கருகி உயிரிழந்துள்ள மற்றொரு நபர் யார் என அடையாளம் கண்டறியப்படவில்லை. காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தம்பதியர் பெங்களூர் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். மருத்துவம் படித்து முடித்த பின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தீ விபத்தில் மருத்துவ தம்பதி உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: